பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,503 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூட்டுறவு சங்கங்களில் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க்கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33 ஆயிரத்து 487 கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விற்பனையாளர் பணிக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 641 விண்ணப்பங்களும், உதவியாளர் பணிக்கு 23 ஆயிரத்து 166 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.