ஞானவாபி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதால் வாரணாசியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவின் படி, கடந்த மாதம் வாரணாசி நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , ‘ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்தாகும். எனவே, இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு, என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற இருப்பதால் வாரணாசியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று காவல் துறை ஆணையர் சதிஷ் கணேஷ் தெரிவித்தார்.