சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக வைரஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். எபோலா வைரஸின் பகுதிகளை கொண்டு இந்த புதிய வகை வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த வைரஸ் மூன்றே நாட்களில் உயிரை பறிக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த வைரஸ் உலக அளவில் அச்சுறுத்தலாக மாறலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் வைரஸ் பாதிப்புகளை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவே இதனை உருவாக்கியதாக சீன விஞ்ஞானிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆய்வகத்தை விட்டு வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
எபோலா வைரஸில் காணப்படும் கிளைக்கோ புரோட்டினை பயன்படுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட்டு புதிய வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, எபோலா வைரஸ் பாதிப்புகளை போலவே, உறுப்பு செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் புதிய வகை வைரஸ் தொற்றிலும் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வைரஸ் எலிகளின் மேல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, எலிகளின் இமைகளில் சிரங்குகள் ஏற்பட்டு, அவற்றின் கண் பார்வை பறிபோனதாக குறிக்கப்பட்டுள்ளது.