கடந்த ஜூலை மாதத்தில் 23.87 லட்சம் 'வாட்ஸ் ஆப்' கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சட்டத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதியை குலைக்கும் கணக்குகளை முடக்க அறிவுறுத்தியது.
இதற்காக குறை தீர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு, ஒவ்வொரு மாதமும் சமூக ஊடக நிறுவனங்கள் அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றன.
இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' தகவல் தொடர்பு செயலி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், குறைதீர்ப்பு குழுவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் 22 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டன. ஜூலையில் 23.87 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டன. புகார் அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.