சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்க மாட்டோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மையை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், கர்நாடகா மற்றும் கேரளா இடையேயான கஞ்சன்காடு- கானியார் ரயில் திட்டத்தில் 40 கிலோ மீட்டர் ரயில் பாதை கேரள மாநிலத்திலும் 31 கிலோ மீட்டர் ரயில் பாதை நமது கர்நாடக மாநிலத்திலும் அமைகிறது.
இத்திட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் அமைகிறது. சுற்றுச்சுசூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் இதற்கு அனுமதி அளிப்பது சாத்தியம் கிடையாது. அதோடு பந்திப்பூர்-நாகரஹொளே தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு நடுவே தலைச்சேரி மற்றும் மைசூரு திட்டம் அமல்படுத்த முடியாது. தற்போது இயக்கப்படும் இரண்டு பஸ்களுடன் கூடுதலாக இரண்டு பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்தார். இரவு நேரத்தில் இயக்கப்படும் இரண்டு பஸ்கள் தவிர கூடுதலாக பஸ்கள் இயக்கப்படாது என்பதும் தெரிவிக்கப்பட்டது.