உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், உலக வங்கியின் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை அஜய் பங்கா பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலக வங்கியின் தலைமை பொறுப்புக்கு அஜய் பங்காவை பரிந்துரை செய்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்த பதவிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்காததால், அஜய் பங்கா போட்டி இன்றி தேர்வாவது உறுதியானது. தற்போது, வரும் ஜூன் 2 ம் தேதி முதல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு, உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டு வரும் சூழலில், உலக வங்கியின் தலைவர் பொறுப்பை இந்தியர் ஒருவர் ஏற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.