ஐரோப்பிய நாடான பின்லாந்து உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் ஸ்மார்ட் போன் செயலியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். இதன் மூலம் பயணிகள் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்திட்டம் மூலம் மனித தொடர்புகளின் தேவை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு போன்றவை குறைக்கப்படும். இதனால் பயணம் வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
இந்த திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி பின்லாந்து அரசு தொடங்கியது. பின்னிஷ் போலீஸ், பின் ஏவியா மற்றும் பின் ஏர் விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இது ஹெல்சிங்கி நகரில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில விமான பயணிகளிடம் மட்டும் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்காக பின் டி சி சி பைலட் என்ற செயலி அறிமுகமாகியுள்ளது. இதில் பயணிகள் தங்களுடைய தரவுகளை பதிவு செய்து சம்பந்தப்பட்ட போலீசாருக்கு செயலி மூலம் அனுப்ப வேண்டும். இதையே அவர்கள் தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது இத்திட்டம் சோதனை அளவில் உள்ளது. 2024 மார்ச் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.