அக்டோபர் 20ஆம் தேதி, டாலருக்கு நிகரான ஜப்பானிய நாணயமான 'யென்' மதிப்பு 150 புள்ளிகளாக உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 1990 க்கு பின்னர், 'யென்' மதிப்பு வரலாற்று சரிவை சந்திப்பது இந்த தினத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சந்தை நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர, ஜப்பானிய நிதித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை முதலே ஜப்பான் நாணயத்தின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வந்தது. இறுதியில், வியாழக்கிழமை 32 வருட குறைவான மதிப்பை பதிவு செய்தது.
இது குறித்து பேசிய ஷின்கின் சென்ட்ரல் பேங்க் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஐ சேர்ந்த மூத்த பொருளாதார நிபுணர் Takumi Tsunoda, “டாலருக்கு நிகரான ஜப்பானிய 'யென்' மதிப்பு 150 புள்ளிகளை கடந்துள்ளது என்பது ஒரு தொடக்க நிலையே ஆகும். அமெரிக்காவின் உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தால், ஜப்பானிய 'யென்' மதிப்பு மேலும் உயர்ந்து, 160 புள்ளிகளை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார். MUFG இன் EMEA சர்வதேச சந்தையின் தலைமை ஆய்வு அதிகாரி Derek Halpenny, “ஜப்பான் நிதி அமைச்சகம் நாட்டின் நாணயக் கொள்கையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது” என்று கூறினார். ஜப்பானிய வங்கிகளில் வட்டி விகிதம் பூஜ்ஜியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில், டாலர் மதிப்பு உயர்வால் பல நாடுகளின் நாணய மதிப்பு சரிந்து வருகிறது. குறிப்பாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றுச் சரிவாக 83 புள்ளிகளை கடந்துள்ளது. மேலும், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு, 1.10 முதல் 1.50 வரை உயர்ந்துள்ளது. அத்துடன், சீனாவின் யுவான் நாணயமும் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது.