கோவையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்ததால் 133 ஏஜன்ட்டுகளுக்கு பால் சப்ளை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆவின் பால் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இச்சலுகை கடந்த ஆண்டு மே 16ல் அமலுக்கு வந்தது. ஆனால், கோவையில் பாக்கெட்டில் குறிப்பிட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.
அரை லிட்டர் பால் பாக்கெட் விலை 25 ரூபாயாகவும், நீல நிற பாக்கெட் பால் 25 ரூபாயாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட் பால் 30 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மளிகை கடைகாரர்கள் மற்றும் சில ஏஜன்ட்டுகள் லிட்டருக்கு ஐந்து ரூபாய் வரை விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மீது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கூறுகையில், கோவையில் 133 ஏஜன்ட்கள் மீது புகார் வந்தது. விசாரைணயில் குற்றச்சாட்டு உறுதியானதால் அவர்களுக்கு ஆவின் பால் சப்ளையை நிறுத்தி விட்டோம். இனி மளிகை கடைக்காரர்களை நேரடியாக ஏஜன்ட்டாக நியமிக்கப்போகிறோம்.
இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். அதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதனால் மக்களிடம் கூடுதல் விலை பெறுவது தடுக்கப்படும் என்று அவர் கூறினார்.