பிஜேபி ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள், பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு பெட்ரோல் மீதான வரிகளை குறைத்துள்ளதாகவும், உலக அளவை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெட்ரோல் விலைகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் 85% கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் நிலவும் அதிக விலைகளால், எண்ணெய் நிறுவனங்கள் கிட்டதட்ட 27276 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. இத்தைகைய சூழலில், மாநிலங்கள் வாட் வரியை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்” என்று கூறினார். இவரது உரை திருப்தி அளிக்காததால், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.