ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக கடுமையான குளிர் அலை வீசி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு 175 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில், தற்போது மைனஸ் 28 டிகிரி செல்சியஸ் வரை குளிர் பதிவாகி வருகிறது. இது அந்த நாட்டின் சராசரி வெப்பநிலையான 0 முதல் 5 டிகிரி செல்சியசை விட மிகவும் குறைவாகும். இதனால் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. இதுகுறித்து பேசிய தாலிபான் ஆட்சியின் பேரிடர் மேலாண்மை துறை செய்தி தொடர்பாளர் சபியுல்லா ரஹிமி, "தீவிரமான பனியால், 70000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உறைந்து போய் உயிரிழந்துள்ளன. மேலும், 175 க்கும் மேற்பட்ட மனிதர்கள் பலியாகி உள்ளனர்" என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில், தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிவாரண பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்களை மீண்டும் அனுமதிக்குமாறு பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.