கடந்த பிப்ரவரி மாதத்தில், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவில் வரலாற்று உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து, ரஷ்யா, மலிவு விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்கி வருகிறது. பல உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், இந்தியாவின் இறக்குமதி அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, போர் தொடங்குவதற்கு முன்னர் 0.2% அளவில் இருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது 35% ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், நாள் ஒன்றுக்கு, வரலாற்று உச்சமாக, 16.2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் அளவைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தொடர்ந்து 5வது மாதமாக, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதலிடம் பிடித்து வருகிறது. அதே வேளையில், ஈராக், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு சரிந்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் இது 16 மாத குறைந்தபட்ச அளவை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.