குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில், உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட சஞ்சான் என்ற கிராமப் பகுதியில், அதிசய மாமரம் ஒன்று உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாமரம், ஆண்டுதோறும் நகர்ந்து செல்வதாக சொல்லப்படுகிறது. இந்த அதிசய மாமரம், குஜராத் மாநிலத்தின் 50 பாரம்பரிய மரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
1300 ஆண்டுகளுக்கு முன்னர், பார்சி இன மக்கள் இந்த பகுதியில் குடியேறியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, போர்ச்சுகீசியர்களின் காலணி ஆட்சி பகுதியாக இருந்து, தற்போது, வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணையில் இந்த மாமரம் காணப்படுகிறது. இந்த மாமரம் பார்சி இன மக்களால் நடப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மரத்தில் புதிய தண்டு வளர்ந்ததும், அதில் இருந்து தரைக்கு இணையாக கிளைகள் வளரத் தொடங்குகிறது. புதிய வேர்களும் இதே முறையில் வளர்கின்றன. எனவே, கடந்த 200 ஆண்டுகளில், இந்த மரம் 200 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து வந்துள்ளது. தற்போது, இந்த மாமரம் கிழக்கு திசையில் நகர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், உள்ளூர் வாசிகள் மற்றும் பழங்குடியினர், இந்த மரத்தை புனிதமாக கருதி, மரத்திற்கு சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்து வருகின்றனர்.