குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியில் லூனா என்ற பெயரில் கிரேட்டர் ஒன்று உள்ளது. இது விண்கல் விளைவால் ஏற்பட்டிருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
நாசா செலுத்திய லேண்ட்சாட் 8 செயற்கைக்கோள் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி லூனா கிரேட்டர் பகுதியை புகைப்படம் எடுத்தது. இந்தப் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நாசா, இந்த கிரேட்டர் விண்கல் விளைவால் ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளது. பூமிக்கு வெளியில் இருந்து வந்த பொருளால் இந்த கிரேட்டர் உருவாகி இருக்கலாம் என இந்திய விஞ்ஞானிகள் ஏற்கனவே கணித்திருந்தனர். தற்போது, அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஜியோ கெமிக்கல் ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. லூனா கிரேட்டர் 1.2 கிலோமீட்டர் அகலம் கொண்டதாகும். உப்பு பாலைவனம் அருகில் அமைந்துள்ள இந்த பகுதி பெரும்பாலான நாட்களில் தண்ணீரில் மூழ்கி இருக்கும். எனவே, வறண்ட சமயங்களில் இந்த பகுதியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதன்படி, இந்த விண்கல் விளைவு 6900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.