அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஹைதிக்கு ஒரு மாதம் வரை விமான சேவைக்கு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வந்த 'ஸ்பிரிட்' விமானம், ஹைதியின் போர்ட் அவ் பிரின்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, வன்முறையாளர்கள் அந்த விமானத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். விமானிகள் துல்லியமாக விமானத்தை மீண்டும் வானில் உயர்த்தி, அண்டை நாடான டொமினிகன் குடியரசில் பத்திரமாக தரையிறக்கினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் விமான பணிப்பெண் ஒருவர் காயமடைந்தார். ஆனால் 155 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விமானம் லேசாக சேதமடைந்தது. மேலும், ஹைதி தலைநகர் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட நினைத்த மற்றொரு விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பல்வேறு விமான நிறுவனங்கள் ஹைதிக்கு விமான சேவையை நிறுத்தின. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஹைதிக்கு ஒரு மாதம் வரை விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. ஐ.நா. விமானங்கள் மற்றும் அவசர மருத்துவ உதவி லாரிகள் விநியோகமும் தடைப்பட்டுள்ளன.