ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் வணிகத்தை தனி நிறுவனமாக பிரிக்கும் நடவடிக்கை 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் நடைபெற்ற பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐடிசி ஹோட்டல்ஸ் தனித்து இயங்கி வளர்ச்சியடைய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய திட்டத்தின்படி, ஐடிசி நிறுவனம் ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளைத் தனது வசம் வைத்திருக்கும். மீதமுள்ள 60 சதவீத பங்குகள், ஐடிசி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு சொந்தமாகும். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) கொல்கத்தா கிளை, இந்த பிரிப்புக்கு அக்டோபர் மாதத்திலேயே ஒப்புதல் அளித்திருந்தது. மேற்கு வங்கத்தில் உள்ள நிறுவனங்களின் பதிவாளரிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்வது உட்பட அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் டிசம்பர் 16ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளன.