கடந்த சில தினங்களுக்கு முன்னர், சூரியனில் 9 கரும்புள்ளிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில், பூமியை விட 30 மடங்கு பெரிய கருந்துளை ஒன்று சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ராட்சச கருந்துளையால் பூமிக்கு பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த ராட்சச கருந்துளை குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது: “சூரியனில் ஏற்பட்டுள்ள இந்த கருந்துளையால், வெள்ளிக்கிழமைக்குள் 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று பூமியை வந்தடையும். குறிப்பாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தெற்காசிய நாடுகள் இதன் தாக்கத்தை உணரலாம். சூரியனிலிருந்து வெளிவரும் வெப்ப கதிர்களால், விண்வெளியில் உள்ள விண்கலங்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பு நேரலாம். பூமியின் துருவப் பகுதிகளில், ‘துருவ ஒளிகள்’ எனப்படும் ஆரோராக்களை அதிகமாக தோன்றச் செய்யும் அளவு இந்த கருந்துளை உள்ளது” என்று கூறியுள்ளனர்.
மேலும், ரீடிங் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் பேராசிரியர் மேத்யூ ஓவென்ஸ், “11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மாற்றங்கள் நடக்கும். அந்த மாற்றங்களுக்கு தற்போது சூரியன் தயாராகி வருவதால், பொதுவாக சூரியனின் துருவப் பகுதிகளில் தோன்றும் கருந்துளைகள், சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் தோன்றும் வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.