பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் குறைந்த விலை பொருட்கள் வர்த்தகத்தில் களமிறங்குகிறது. அதன்படி, மீஷோ உள்ளிட்ட தளங்களுக்கு போட்டியாக ‘பஜார்’ என்ற புதிய தளத்தை தொடங்குகிறது. இந்த தளத்தில் 600 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான விலை உடைய பொருட்கள் சந்தைப்படுத்தப்படும். குறிப்பாக, பிராண்டட் அல்லாத பொருட்கள் விற்கப்படும். ஜவுளி, நகைகள், காலணிகள், வாட்சுகள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் அமேசான் பஜார் தளத்தில் சந்தைப்படுத்தப்படும்.
அமேசான் நிறுவனம், அண்மையில் தனது விற்பனையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பஜார் என்ற புதிய தளம் தொடங்கப்படுவதாகவும், அதில் விற்பனையாளர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் தங்கள் பொருட்களை சந்தை படுத்தலாம் எனவும், கூறப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், விற்பனையாளர்களுக்கு மட்டுமின்றி அமேசான் நிறுவனத்துக்கும் அதிக லாபம் ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.