28 April 2022, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீ விபத்து ஏற்பட்ட 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்திற்கு பதிலாக ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள டிஎம்எஸ் மற்றும் டிஎம்இ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனை கட்டிடங்களில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.114.69 கோடி ஒதுக்கீடு செய்ய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.ஊரகப் பணிகள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 157 நிறுவனங்களுக்கு ரூ. 29.71 கோடி என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 95 மருத்துவமனைகளுக்கு ரூ.84.98 கோடி என்று மொத்தம் 252 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.