திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய சீதா ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், கோவில்கள், சிலைகள், பாதுகாப்பு காரணமாக புகைப்படம் எடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் புகைப்படம் எடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் சிலைகளுக்கு முன் நின்று செல்பி எடுப்பது, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்கள் சத்திரம் போல் இருக்கிறது. எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்கின்றோம். மேலும், கோவிலுக்குள் அர்ச்சகர் உள்பட யாருமே செல்போன் கொண்டு செல்ல கூடாது. இந்த சுற்றறிக்கையை இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.