இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், "2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் வடிவ செல் ரத்த சோகை நோயை (Sickle Cell Anemia) ஒழிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். பாதிக்கப்பட்ட பழங்குடியின பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அறிவாள் வடிவ செல்கள் ரத்த சோகை நோய் குறித்த ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அரிவாள் செல் நோய் என்பது மரபணு ரத்த சிவப்பணு கோளாறு காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக, ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்கள் வட்ட வடிவில் இருக்கும். இவற்றால், அதிக அளவிலான ஆக்சிஜன் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும். இந்நிலையில், அரிவாள் செல் நோய் பாதித்த ஒருவருக்கு, ரத்த சிவப்பணுக்கள் கடினமாகவும், ஒட்டும் தன்மையுடனும், அரிவாள் போல தோற்றமளிக்கும் ஆங்கில எழுத்தான சி வடிவிலும் இருக்கும். இதனால், அவருக்கு ஹீமோகுளோபின் அசாதாரணமாக இருக்கும். மேலும், ரத்த செல்கள் விரைவிலேயே இறந்து விடும். இதனால், ரத்த அணுக்களின் பற்றாக்குறை ஏற்படுவதுடன், சிறிய ரத்த நாளங்கள் வழியாக செல்லும் போது, ரத்த ஓட்டத்தை நிறுத்தும் அளவிற்கு அபாயமும் உள்ளது. அத்துடன், உடல் வலி, தொற்று நோய், மாரடைப்பு பக்கவாதம் போன்ற தீவிர நோய்களை ஏற்படுத்தும் அபாயமும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.