கடந்த 2003ஆம் ஆண்டு, இந்திய விமானப்படைக்கு 115 நவீன பயிற்சி விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டது. அதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. கிட்டத்தட்ட 5653.44 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு, விமானங்களின் பாகங்களை ரோல்ஸ் ராய்ஸ் வழங்கும். அதன்படி, பாகங்கள் ஒப்படைக்கப்பட்டு, பயிற்சி விமானங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு, இந்தியாவின் ராணுவ விமான பேர ஒப்பந்தத்தை பெறுவதற்கு, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக, பிரிட்டனில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், இந்தியாவிடம் இருந்து விமான ஒப்பந்தத்தை பெற, ரோல்ஸ் ராய்ஸ் சார்பில், 1.85 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் இடைத்தரகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன் பெயரில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குனர் மற்றும் இடைத்தரக்கர்களாக செயல்பட்டோர் .ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது