அதிகரித்து வரும் காலநிலை மாற்றம், மனித மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் லான்செட் நரம்பியல் இதழில் வெளியாகி உள்ளன.
காலநிலை மாற்றத்தால் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1968 முதல் 2023 வரை வெளியான பல்வேறு ஆவணங்களை மதிப்பாய்வு செய்து இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பநிலை உயர்வு காரணமாக மனச்சோர்வு மற்றும் கவலை ஏற்படுகிறது. பொதுவாக, பெரும்பாலான நரம்பியல் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கான முக்கிய காரணம் கவலை மற்றும் மனச்சோர்வு ஆகும். மேலும், காலநிலை மாற்றத்தால் தூக்கம் பாதிப்படைகிறது. தூக்கம் பாதிப்படையும் பட்சத்தில் பல்வேறு நோய்கள் ஏற்படும். அதன்படி, காலநிலை மாற்றத்தால் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒற்றைத் தலைவலி, பக்கவாதம், மறதி, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.