ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்., - எம்.பி., ராகுல், ராஜஸ்தானின் ஆல்வாரில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
ஆனால் அதை வாங்கும் சக்தி ஏழை மக்களுக்கு இல்லை. எனவே, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தலா 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அவர் பேசினார்.