மின் இணைப்பு எண்ணுடன் 'ஆதார்' எண் இணைக்கும் பணி முடிவடைந்த நிலையில் ஒரு லட்சம் பேர் இன்னும் இணைக்காமல் உள்ளனர்.
தமிழக அரசு இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. இலவச மற்றும் மானியவிலை மின்சாரம் வழங்கப்படும் 2.67 கோடி நுகர்வோரின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியை மின் வாரியம் 2022 நவம்பர் 15ல் துவக்கியது. இதற்கு பல முறை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 28ம் தேதியுடன், அவகாசம் முடிவடைந்தது.
இன்னும் ஒரு லட்சம் பேர் ஆதார் இணைக்காமல் உள்ளனர். அவர்கள் அரசு குடியிருப்புகளில் வசிப்பதால் தான் ஆதார் இணைக்கவில்லை என்பதை மின் வாரியம் கண்டறிந்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்ட நபர்களின் விபரங்களை மின் வாரியம் தமிழக மின் ஆளுமை முகமையிடம் வழங்கியுள்ளது. அதன் வாயிலாகவே ஒரே நபரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன என்பது உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.