ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் கலந்துரையாடினார். அத்துடன், பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்கரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, தைவான் விவகாரம் குறித்து விவாதித்ததாக தெரியவந்துள்ளது. இறுதியாக, சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்பட தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், அணு ஆயுதப் போருக்கு எதிராக இரு நாட்டுத் தலைவர்களும் குரல் கொடுத்தனர்.