கௌதம் அதானி தனது 105.4 பில்லியன் டாலர் குடும்ப சொத்தை நிர்வகிப்பதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, வெளி நிறுவனங்களில் இருந்து ஆடிட்டர்களை நியமித்து, தனது குடும்ப அலுவலகங்களுக்கான பிரத்தியேக தலைமை செயல் அதிகாரியை நியமிக்க உள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் விமர்சன ரீதியான அறிக்கையை தொடர்ந்து, அதானி குடும்பத்தின் கணக்குகளை வெளிப்படை தன்மையுடன் கொண்டுவர கௌதம் அதானி திட்டமிட்டுள்ளார். இதற்காக, 2 முக்கிய கணக்காளர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். புதிதாக நியமிக்கப்படும் ஆடிட்டர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர், முதலில் அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் கீழ் பணி செய்வர். அதற்குப் பிறகு, நேரடியாக கௌதம் அதானிக்கு கீழ் பணி செய்வர். இந்த புதிய நிர்வாக அமைப்பு, வரும் ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.