நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேபாளத்தில் சங்குவாஷபா மாவட்டத்தில் ஹிவா ஆற்றில் நீர்மின்சார திட்ட கட்டுமான பணி தொழிலாளர்கள் கனமழையில் சிக்கியதில் ஒரு தொழிலாளர் உயிரிழந்து உள்ளார். 17 ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர்.
மேலும் தேபிள்ஜங் மாவட்டத்தில், வீடுகள் பல அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதில் சிக்கி, மற்றொரு நபர் உயிரிழந்து உள்ளார். வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 3 பேரை காணவில்லை. இதுவரை மொத்தம் 5 பேர் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். 28 பேரை இன்னும் காணவில்லை. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.














