கோதுமை கடுகு உட்பட 6 விளை பொருள்களுக்கு ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு தற்போது ராபி மற்றும் காரிப் பருவத்தில் விளைவிக்கப்படும் 23 விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிர்ணயிக்கிறது. இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடியது. இதில் கோதுமை உட்பட 6 விளைபொருள்களுக்கான ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடந்த 2021-2022-ம் ஆண்டில் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015-ஆக இருந்தது. இது ரூ.2,125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமையின் உற்பத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஏற்படும் செலவு ரூ.1,065 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கடுகின் எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டு ரூ.5,450 ஆக உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பார்லியின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,635-லிருந்து, ரூ.1735 ஆகவும், பருப்புவகைகளின் எம்எஸ்பி ரூ.5,230-லிருந்து ரூ.5,335 ஆகவும், மைசூர் பருப்பின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பின் காரணமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.














