இந்தியாவின் முதல் குளிர்சாதன டபுள் டக்கர் மின்சார பேருந்து, மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாநகர் போக்குவரத்து நிறுவனம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் பாரம்பரிய டபுள் டக்கர் பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களிலும் புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார பேருந்துகள் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 20 பேருந்துகள் பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்துகளில், கூடுதலாக, டிஜிட்டல் பயணச்சீட்டு முறை, சிசிடிவி கேமராக்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, அவசர கால உதவி பட்டன் போன்ற பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்தில் 65 பேர் அமர்ந்தும், 90 முதல் 100 பேர் நின்றும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து பொது போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.