அயோத்தியில் சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் படகு இல்லம் சார்ந்த சுற்றுலா திட்டங்களை தொடங்க உள்ளதாக உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா துறையை ஊக்குவிக்க இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநிலத்தின் சுற்றுலாத்துறை துணை இயக்குனர் ஆர் பி யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ராமர் கோவில் திறக்கப்படும் அதே நேரத்தில், சொகுசு கப்பல் மற்றும் படகு இல்ல சேவைகளை அறிமுகம் செய்யும் வகையில் செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
சொகுசு கப்பல் திட்டத்திற்காக கணக் மற்றும் புஷ்பக் என்ற 2 சொகுசு கப்பல்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக, அலக்நந்தா க்ரூஸ்லேன் நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. நயா மற்றும் குப்தர் படித்துறைகளில் படகு துறை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரண்டு அடுக்குக் கொண்ட சொகுசு கப்பல்களில், டிஜிட்டல் திரை, செல்ஃபி பாயிண்ட், விடுதிகள் உட்பட பல நவீன வசதிகள் இடம் பெற உள்ளன. மேலும், 100 பேர் வரை பயணம் செய்யும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு, சரயு ஆற்றில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சிகளை பார்வையிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலா மேம்படுவதுடன், ஆரத்தி, தீபோற்சவம் போன்ற நேரங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என கருதப்படுகிறது.