மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பொருட்களை அரசு அலுவலகங்களில் வாங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
நேற்று நடந்த சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பாஜக தரப்பில் உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘‘மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிடைக்கும் வருவாயால் அவர்களது குடும்பத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தவும், அவற்றை அரசுத் துறைகள் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தற்போது, பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்து, 69 பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றன.மேலும்,புதிய இணையதள முகப்பு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் மத்திய அரசின் இணையதளம் மூலம் விற்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்தார்.