கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் குழந்தைகள் இடையே தட்டம்மை பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 2 ஆண்டுகளாக பரவி பெருந்தொற்றாக உருவெடுத்து உள்ள சூழலில், சமீப நாட்களாக நாடு முழுவதும் தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் சில பகுதிகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. மராட்டியத்தின் மும்பை, கேரளாவின் மலப்புரம், குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சி ஆகிய நகரங்களில் தட்டம்மை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அதிக அளவில் குழந்தைகளை பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தொற்று அதிகரித்து உள்ள கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் மத்திய அரசு சார்பில் உயர்மட்ட குழுக்களை ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மத்திய குழுக்கள் சம்பவ பகுதிக்கு நேரிடையாக சென்று பார்வையிடும். நோய் பரவல் பற்றி ஆய்வு பணி மேற்கொள்ளும். நோய் பரவல், தொற்று ஆகியவற்றை கண்டறியும் மாநில குழுக்களுடன் இணைந்து இந்த மத்திய குழுக்கள் பணியாற்றும் என்று கூறப்பட்டுள்ளது.