விலை உச்சவரம்பு நிர்ணயம் காரணமாக எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் என அதிபர் புதின் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஒருமித்து, ரஷியாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்படும் எண்ணெய்க்கு பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர் தரப்படும் என விலை உச்சவரம்பு நிர்ணயித்தது. இந்த விலைக்கு கூடுதலாக எண்ணெய் விற்கப்பட்டால், ரஷிய எண்ணெய் ஏற்றுமதிக்கான காப்பீடு, நிதி மற்றும் பிற சேவைகள் தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் முன்பே கூறியது போன்று, மேற்கத்திய நாடுகளின் விலை உச்சவரம்பு நிர்ணயத்திற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை கிடையாது என அதிரடியாக கூறினார். தேவைப்பட்டால், அதுபோன்ற நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தியை நாங்கள் குறைப்போம் என கூறியுள்ளார். இதுபற்றி அடுத்த சில நாட்களில் விவரங்கள் தெரிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள எண்ணெய்க்கான விலை உச்சவரம்பு ஆனது தற்போது, ரஷியாவின் எண்ணெய் விற்பனை விலையுடன் ஒத்து போகின்ற அளவிலேயே உள்ளன. அதனால், அவர்களின் அறிவிப்பு ரஷியாவுக்கு எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்த போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.