அடுத்த வருடம் சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பொறுப்புகளை வரும் டிசம்பர் 1ம் தேதி, இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியா பெறுகிறது. எனவே, மாநாட்டிற்கான புதிய லோகோ, தீம் மற்றும் இணையதளம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் வெளியிடுகிறார். இந்தியாவில் நடைபெற இருக்கும் பெரிய அளவிலான சர்வதேச சந்திப்பாக இந்த மாநாடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு, சுமார் 32 துறைகளில், 200க்கும் மேற்பட்ட மாநாட்டு சந்திப்புகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல், ஜி 20 மாநாடு நடைபெற்று வருகிறது. உலக அளவில் 90% ஜிடிபி, 80% உலகப் பொருளாதாரச் செயல்பாடுகள், முக்கால் பங்கு சர்வதேச வர்த்தகம் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய உலக நாடுகள் ஜி 20 அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, இந்த மாநாட்டிற்கான லோகோ, தீம் மற்றும் இணையதளம் ஆகியவை முக்கியம் பெறுகிறது.