இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வரும் ஜூன் 4ம் தேதி தனது முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணத்தை தொடங்க உள்ளார். அவர், சூரினாம், செர்பியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதியின் பயண விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் 4 முதல் 6 ம் தேதி வரை, சூரினாமின் பாராமரிபோ நகருக்கு ஜனாதிபதி செல்கிறார். அங்கு சூரினாம் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகியை அவர் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, ஜூன் 7 முதல் 9 ம் தேதி வரை, செர்பியா செல்லும் அவர், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் ஊசிக்கை சந்திக்கிறார். இருநாட்டு அதிபர்களின் அழைப்பை ஏற்று ஜனாதிபதியின் பயணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.