ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றிய பெருமை உடையவர். எனவே ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார்.
இதை தொடர்ந்து, ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் பலவற்றையும் விவாதித்தனர்.