இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் ஆகிய தெய்வ உருவப்படங்களை அச்சிட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அவர் பேசினார். “முயற்சிகள் செய்தாலும் தெய்வங்களின் ஆசீர்வாதம் இல்லாமல் நம்மால் வெற்றி அடைய முடியாது. நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நம்மால் முடிந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதனுடன் சேர்த்து, இந்த நடவடிக்கையும் எடுக்கலாம். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை அச்சிட பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து ஓரிரு நாட்களில் கடிதம் மூலம் பிரதமருக்கு கோரிக்கை வைக்க உள்ளேன்” என்று கூறினார். மேலும், இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அவர், “இந்தோனேசியாவால் தெய்வ உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிலையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அக்டோபர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 528.367 பில்லியனாக இருந்தது. இது கடந்த இரண்டு வருட அளவில் மிகக் குறைந்த இருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், முந்தைய வாரத்தை விட 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்தியாவின் அந்நியச் செலாவணி வேகமாக கரைந்து வருவது தெரிய வருகிறது. அத்துடன், தேசத்தின் தங்கம் இருப்பு 37.453 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த பொருளாதாரச் சரிவை சரி செய்வதற்கு இத்தகைய யோசனையை கெஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.