குழந்தை பிறப்பை பதிவு செய்யும் பிறப்பு சான்றிதழில், குழந்தையின் தாய் தந்தை எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை தனித்தனியாக குறிப்பிட வேண்டும். அத்துடன், குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோரின் மதம் பற்றிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, பிறப்புச் சான்றிதழில், குடும்பத்தின் மதம் எது என்பது குறிப்பிடப்பட்டு வந்தது. இனிமேல், குழந்தை பிறப்பு பதிவுக்கான படிவம் 1ல் சில திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாயின் மதம் , தந்தையின் மதம் என 2 கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், தேசிய அளவில் பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளை உருவாக்குவதற்கு இந்த தகவல்களை இணைப்பது முக்கியமாகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதம் சார்ந்த விவரங்கள் தகவலுக்காக மட்டுமே பெறப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பெற்றோர்களின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களை பிறப்பு சான்றிதழில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.