உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக கீவ் நகர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலின் போது ஒரு ஏவுகணை போலந்து நாட்டின் வான் வழியில் சென்றதாக அந்நாடு புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவிடம் போலந்து விளக்கம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீவ் ராணுவ தலைமை நிர்வாகி போப்கோ கூறியுள்ளதாவது, வடக்கு பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் ரஷ்யாவின் சரடோவ் பிராந்தியத்தில் எங்கள்ஸ் மாவட்டத்தில் இருந்து நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றார். இது தொடர்பாக போலந்து பாதுகாப்பு அமைச்சர் கோஷினியாக் கூறுகையில், ரஷ்ய ஏவுகணை மேற்கு உக்ரைனை தாக்கும் நோக்கில் போலந்து நாட்டின் ஒசார்ட் நகரின் வான் வழியில் அத்துமீறி நுழைந்துள்ளது. இதையடுத்து ராணுவ ரேடார் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு நாட்டின் வான் வழியை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஏவுகணை போலந்தை குறி வைத்து ஏவப்பட்டிருந்தால் நாங்கள் சுட்டு வீழ்த்தி இருப்போம் என்றார். அதோடு உக்ரைன் மீது தாக்குதலை நிறுத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என போலந்து வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவை கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டதிலிருந்து ஏவுகணைகள் போலந்து வான் வழியே ஏவப்படுகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு அவ்வாறு ஏவப்பட்ட உக்ரைன் ஏவுகணை காரணமாக போலந்தில் இரண்டு பேர் பலியாகினர்.