இந்த ஆண்டு வெங்காய விளைச்சல் அதிகமாக இருந்ததால், அதற்கான உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மகாராஷ்டிரா மாநில வெங்காய விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். இவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைபயணமாக வந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 10000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
நாசிக்கில் கிளம்பிய அவர்களது பேரணி, நேற்று முன்தினம், தானே வந்தடைந்தது. பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் இணைந்ததால் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், தாதா புசே, அதுல் சாவே ஆகிய அமைச்சர்கள் விவசாயிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, “வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு 600 ரூபாய் மானியம் கொடுக்க வேண்டும்; விவசாயத்துக்கு 12 மணி நேரம் மின்சாரம் கொடுக்க வேண்டும்” ஆகிய பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கு பெற்ற அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, குவிண்டாலுக்கு 300 ரூபாய் மானியம் கொடுப்பதாக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, விவசாயிகளின் பேரணி பாதியில் நிறுத்திக் கொள்ளப்பட்டது.