அரசு பேருந்துகளில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதால் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறை ஒரு புறமும் அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால் வெளியூர் பயணம் செய்ய மக்கள் பேருந்து, ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகள் இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன. இன்று முதல் மே 1-ந் தேதி வரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.