தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 21, 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 4,218 சிறப்புப் பேருந்துகள், பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பேருந்துகள் என மொத்தம் 10,588 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அக்டோபர் 21, 22, 23 ஆகிய நாட்களில் 2 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க மண்டலம் தோறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் பேருந்து நிலையங்கள் மட்டுமின்றி ஆங்காங்கே ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டு, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறலின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து இணைக்கும் வகையில் 340 சிறப்புப் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பேருந்து இயக்கம் பற்றி அறிய மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.