இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கிடையே இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
இதையடுத்து இம்ரான் கானை போலீசார் தலைமை நீதிபதி பந்தியால் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும். உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.














