மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் குப்பத்தில் புயல் பாதிப்பு குறித்து நேற்று மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, தேவனேரி மற்றும் கொக்கிலமேட்டில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பூமிக்கு அடியில் மின்வயர்களை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் மனு அளித்தனர்.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேதமடைந்த படகு மற்றும் மீன்பிடி வலைகள் போன்றவற்றின் விவரங்களை மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் துல்லியமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்களை முதல்வரிடம் தெரிவித்து மீனவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும். தூண்டில் வளைவு கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.