பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க அரசு அலுவலர்களுக்கு யோகாபிரேக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும்,
புத்துணர்ச்சியடையவும், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பணியிடத்தில் மீண்டும் கவனம் செலுத்தவும் 'யோகா-பிரேக்' எனும் செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய 5 நிமிட நெறிமுறை இந்த மொபைல் செயலி மூலம் கிடைக்கும்.
எனவே இதுதொடர்பாக ஆயுஷ் அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அரசு அலுவலர்கள் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விலக்கு அளிக்க, இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது பணியாளர்களுக்கு பணியிடத்தில் ஆறுதல் அளிக்கும். இந்த 'யோகா-பிரேக்' செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் யோகா ஆகிய யூடியூப் சேனல்களிலும் இது தொடர்பான வீடியோக்கள் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














