தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு ஏற்கெனவே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பிற்கான செலவுகளையும் முகேஷ் அம்பானியே ஏற்கிறார். இந்நிலையில், முகேஷ் அம்பானிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. இதையடுத்து, முகேஷ் அம்பானிக்கான பாதுகாப்பை இசட் பிரிவில் இருந்து இசட் பிளஸ் பிரிவாக உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு என்பது நாட்டிலேயே இரண்டாவது உயர்ந்த பாதுகாப்பு ஆகும். இசட் பிளஸ் பிரிவில் 55 பாதுகாப்பு பணியாளர்கள், 10க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவார்கள்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி வீடு அருகே நின்றுகொண்டிருந்த வாகனத்தில் வெடிபொருட்கள் இருந்தன. அந்த வாகனத்தின் உரிமையாளர் பின்னர் இறந்துவிட்டதும் தெரியவந்தது. இவ்வழக்கில் சச்சின் வேஸ் என்ற காவல் அதிகாரி கைது செய்யப்பட்டார். இதனால் சில உயர் அதிகாரிகளும் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.