சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கும்படி குறிப்பிட்டு இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து அரசுடன் பேசி தீர்வு காணும் படி கூறியிருந்தார். பின்னர் கடந்த மூன்றாம் தேதி தேதி ஆம்னி உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி அளிக்கவும் பெருங்களத்தூர் பகுதியில் பயணிகளை இறக்க மட்டும் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் உள்ளது. அங்கிருந்து பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என கூறினார். இதனை அடுத்து அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி,இறக்க அனுமதித்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைத்ததன் நோக்கம் வீணாகிவிடும் என தெரிவித்த நீதிபதி, எந்தெந்த வழித்தடங்களில் பயணிகளை ஏற்றி,இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது குறித்தும் மாற்று வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு வரைபடம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.